சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலணம் காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் தொடர்ந்து நீடிப்பதால் 2 நாட்களுக்கு புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேட்டூர், அரியலூர், தொழுதூரில் 7 செ.மீ. மழையும், கோவிளன்குளம், திருச்செங்கோட்டில் 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தென் மேற்கு பருவமழை காரணமாக ஜூன் 1 முதல் இதுவரையில் 180 மிமீ மழை பெய்துள்ளது.
இந்நிலையில், அக்டோபர் மாதம் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. தற்போது தென் மேற்கு பருவமழை கேரளாவில் பெய்து வரும் நிலையில் பசிபிக் கடல் மட்டத்தில் அதிகரித்து இருந்த எல்நினோவின் வெப்ப நிலை குறையத் தொடங்கியுள்ளது. இதனால் பருவமழை காலத்தில் அதிக அளவில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அதனால் தென் மேற்கு பருவமழையும் இனி அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் தமிழகத்திலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தருமபுரி, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சேலம் உள்ளிட்ட 10 மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.