×

ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கடல் அரிப்பால் 21 தீவுகள் மூழ்கும்... ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்

கீழக்கரை: கடல் அரிப்பால் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 21 தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக, கடல் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை பகுதி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பல தீவுகள் உள்ளன. இங்கு பல்வேறு அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. பவளப்பாறைகள் நிறைந்துள்ள இத்தீவுகளால் சுனாமி போன்ற பேரிடர்களிலிருந்து இப்பகுதிகள் பாதுகாக்கப்படுகின்றன.

கீழக்கரை, மண்டபம், தூத்துக்குடி, வேம்பார் கடல் பகுதிகளில், வான்தீவு, காசுவார் தீவு, காரைச்சல்லி தீவு, விலங்குசல்லி தீவு, உப்புத்தண்ணி தீவு, புலுவினிசல்லி தீவு, நல்லதண்ணி தீவு, ஆனையப்பர் தீவு, வாலிமுனை தீவு, அப்பா தீவு, பூவரசன்பட்டி தீவு, தலையாரி தீவு, வாழை தீவு, முள்ளி தீவு, முயல் தீவு, மனோலி தீவு, மனோலிபுட்டி தீவு, பூமரிச்சான் தீவு, புள்ளிவாசல் தீவு, குருசடை தீவு, சிங்கில் தீவு ஆகிய 21 தீவுகள் உள்ளன. இதில் தூத்துக்குடி பகுதியில் 4 தீவுகள், வேம்பாரில் 3 தீவுகள், கீழக்கரையில் 7 தீவுகள், மண்டபத்தில் 7 தீவுகள் என நான்கு பகுதிகளாக பிரிக்கப்படுகின்றன. இயற்கை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் தூத்துக்குடி பகுதியில் இருந்த விலங்குசல்லி தீவு, கீழக்கரை பகுதியில் இருந்த பூவரசன்பட்டி உட்பட 2 குட்டி தீவுகள் கடலில் மூழ்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த சுகந்தி தேவதாசன், கடல் பகுதியில் ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு சமர்ப்பித்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: மன்னார் வளைகுடாவில் தூத்துக்குடி பகுதியில் உள்ள தீவுகள் கடந்த 50 ஆண்டுகளில் 71 சதவீதம் சுருங்கியுள்ளது. கீழக்கரை பகுதியில் உள்ள தீவுகள் 43.49 சதவீதம், வேம்பார் பகுதியில் உள்ள தீவுகள் 36.21 சதவீதம், மண்டபம் பகுதியில் உள்ள தீவுகள் 21.84 சதவீதம் நிலப்பரப்பில் குறைந்துள்ளன. விதிவிலக்காக மண்டபம் பகுதியில் உள்ள முயல் தீவு, மனோலி தீவு, சிங்கில் தீவு உள்ளிட்ட தீவுகளின் நிலப்பரப்பு மட்டும் 10.4 சதவீதம் அதிகரித்துள்ளது. தீவுகளின் பரப்பு சுருங்குவதற்கு முக்கிய காரணமாக கடல் அரிப்பு உள்ளது. இந்நிலை தொடர்ந்தால் தூத்துக்குடி பகுதியில் உள்ள காசுவார் மற்றும் காரைச்சல்லி தீவுகள் வரும் 2036ம் ஆண்டுக்குள் முழுமையாக கடலில் மூழ்கிவிடும். இதுபோல் வேம்பார் பகுதியில் உள்ள உப்புத்தண்ணி, புலுவினிச்சல்லி மற்றும் நல்ல தண்ணி ஆகிய தீவுகள் 2064ம் ஆண்டில் இருந்தும், கீழக்கரை பகுதியில் உள்ள ஆனையப்பர், வாலிமுனை, பூவரசன்பட்டி உள்ளிட்ட தீவுகள் 2032ம் ஆண்டில் இருந்தும், மண்டபம் பகுதியில் உள்ள மனோலி, பூமரிச்சான், புள்ளிவாசல் ஆகிய தீவுகள் 2140ம் ஆண்டில் இருந்தும் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆபத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து வனச்சரகர் சிக்கந்தர் பாட்சா கூறுகையில், ‘‘மன்னார் வளைகுடா கடலில் உள்ள தீவுகளை சுற்றிலும் பவளப்பாறைகள் உள்ளன. இந்தபாறைகளை மீனவர்கள் சேதப்படுத்தாமல் இருந்தாலே தீவுகள் அழியாமல் காப்பாற்றப்படும். மேலும் தீவுகளில், வனத்துறை சார்பில் வருடத்திற்கு 500 மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுத்து நட்டு வருகிறோம். ஆகவே தீவுகள் அழியாது. மேலும் மீனவர்கள் பவளப்பாறைகளை சேதப்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அவர்களுக்கு இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்’’ என்றார்.

Tags : Ramanathapuram, Thoothukudi
× RELATED தூத்துக்குடி அருகே சீல் வைக்கப்பட்ட...