பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பகுதியில் செயல்படும் சாயப்பட்டறைகள் உலர் கழிவுகளை மூட்டையில் கட்டி எடுத்து வந்து காவிரிக்கரையில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் கொட்டிச்செல்கின்றனர். மலைபோல் குவிந்துள்ள கழிவுகள், மழைநீரில் கரைந்து காவிரி ஆற்றில் கலக்கிறது. திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளுக்கு தேவையான நூல்களுக்கு வண்ணமேற்றும் பணிகள் பள்ளிபாளையம் சாயச்சாலைகளில் நடைபெற்று வருகிறது. மாசு கட்டுப்பாடு துறையினரின் கெடுபிடியால் பெரிய சாயப்பட்டறைகள் பகல் முழுவதும் சாயக்கழிவுகளை தொட்டிகளில் தேக்கி வைத்து இரவில் சாக்கடை கால்வாய் மற்றும் குழாய் அமைத்து காவிரியில் வெளியேற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், அனுமதிபெற்ற சாயப்பட்டறைகளையும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். சாயக்கழிவுநீரை சுத்தப்படுத்தாமல் வெளியேற்றும் அனுமதிபெற்ற சாயப்பட்டறைகளின் மின் இணைப்புகளை துண்டிக்கும்படி அதிகாரிகள், சென்னையில் உள்ள மின்வாரி வாரிய அலுவலகத்திற்கு பரிந்துரைத்து வருகின்றனர். இதனால், மேலும் சில சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிகிறது.