புதுடெல்லி: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா மறுப்பு தெரிவித்தார். மேலும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் முறையிடுமாறு ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர்களுக்கு நீதபதி என்.வி.ரமணா வலியுறுத்தினார். இதனையடுத்து ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து முறையிட்டனர். இந்நிலையில் மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. அயோத்தி வழக்கை விசாரித்து வருவதால் உடனடியாக விசாரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், கடந்த 2007ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரின் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு மொரிஷியசில் இருந்து ரூ.305 கோடி அன்னிய முதலீடு பெறப்பட்டது. இதற்காக, அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லாத சான்றிதழை முறைகேடாக பெற்று தருவதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்தின் மூலம் பேரம் நடந்ததாகவும், இந்த காரியத்தை முடிக்க பெரும் தொகை கமிஷனாக பெறப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இதேபோல், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ‘ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக வலுவான ஆதாரங்கள் இரு்க்கின்றன. மேலும், வழக்கு விசாரணையின்போது ப.சிதம்பரம் சரியான முறையில் ஒத்துழைப்பு வழங்கவில்லை, அதனால், அவரை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் அனுமதிக்க வேண்டும்,’ சிபிஐ.யும், அமலாக்கத் துறையும் பாட்டியாலா நீதிமன்றத்தில் தெரிவித்தன.
இதனால், இந்த வழக்கில் சிபிஐ.யும், அமலாக்கத் துறையும் தன்னை கைது செய்யாமல் இருக்க, ப.சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதில், பல மாதங்களாக அவரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில், ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மீதான விசாரணை முடிந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுனில்கர் தீர்ப்பு அளித்தார்.
அதில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்றம், அவருடைய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இன்று விசாரணைக்கு வந்த போது முன் ஜாமீன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா மறுப்பு தெரிவித்தார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் முறையிடுமாறு ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர்களுக்கு நீதபதி என்.வி.ரமணா வலியுறுத்தினார்.