ஸ்ரீநகருக்கு சென்ற குலாம்நபி ஆசாத் தடுத்து நிறுத்தம்: 2வது முறையாக அதிரடி

ஜம்மு: காஷ்மீருக்கு சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விமான நிலையத்தில் 2வது முறையாக நேற்று மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.காஷ்மீரில் பதற்றம் முழுமையாக குறையாததால் இன்னும் அங்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 8ம் தேதி காஷ்மீர் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி  ஆசாத் நகர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார். இந்நிலையில், நேற்று அவர் மீண்டும் காஷ்மீர் புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து ஜம்முவுக்கு பிற்பகல் 2.45 மணியளவில் விமானத்தில் வந்து சேர்ந்தார். அவரை விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல போலீசார்  அனுமதிக்கவில்லை.

மேலும், மாலை 4.10 மணியளவில் டெல்லிக்கு திரும்பிய விமானத்தில் வலுக்கட்டாயமாக அவர் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டார். ஆசாத்தின் சொந்த மாநிலமான காஷ்மீரில் உள்ள வீட்டுக்கு செல்வதற்கும் அவர்  அனுமதிக்கப்படவில்லை. இதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரவீந்தர் சர்மா கூறுகையில், ‘‘ஆசாத்தை அவரது சொந்த மாநிலத்தில் அனுமதிக்க மறுத்தது துரதிருஷ்டவசமானது. காஷ்மீர் நிலவரம் குறித்து அறிய சிலரை சந்தித்து பேச வந்த நிலையில் திருப்பி  அனுப்பப்பட்டுள்ளார்’’ என்றார்.

Related Stories: