சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் டி.வாசு நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு கிரிக்கெட் சங்க (டிஎன்சிஏ) செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. அதில் விரைவில் தொடங்க உள்ள ரஞ்சி கோப்பை போட்டி, புதிய பயிற்சியாளர் நியமனம் குறித்து விவாதிக்கப்பட்டது. செந்தில்நாதன் தலைமையிலான தேர்வுக்குழு பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் டி.வாசு, தமிழக சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
தமிழக அணியின் முன்னாள் கேப்டன் ஆர்.பிரசன்னா உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த முறை பீல்டிங் பயிற்சியாளராக பணியாற்றினார். இவர்கள் ஓராண்டுக்கு பதவி வகிப்பார்கள். தமிழக அணி பங்கேற்கும் விஜய் ஹசாரே ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செப். 24ம் தேதியும், தியோதர் கோப்பை ஒருநாள் போட்டி அக். 31ம் தேதியும், சையது முஷ்டாக் அலி டி20 போட்டி நவ. 8ம் தேதியும் தொடங்குகின்றன. ரஞ்சிக் கோப்பை போட்டிகள் டி. 9ம் தேதி தொடங்கும்.