காதலனுடன் ஓடியதால் ஏர்போர்ட் பெண் ஊழியரை கொன்று பெற்றோர் தற்கொலை: எர்ணாகுளம் அருகே பரபரப்பு

திருவனந்தபுரம்: எர்ணாகுளம்  அருகே காதலனுடன் ஓடிய மகளை அழைத்து வந்து கொலை செய்துவிட்டு தம்பதி  தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள புதுவைப் பகுதியை  சேர்ந்தவர் சுபாஷ் (54). இவரது மனைவி கீதா(53). இந்த தம்பதியின் மகள்  நயனா (24).இவர் பெங்களூர் விமான நிலையத்தில்  பணிபுரிந்து வந்தார். இதற்காக அவர் அங்குள்ள  விடுதியில் தங்கி இருந்தார்.  அவரது பெற்றோர் அவ்வப்போது பெங்களூர் சென்று மகளை பார்த்து வந்தனர்.இந்த  நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நயனா திடீரென மாயமானார். அவரது  பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். இது குறித்து சுபாஷ் ஞாரைக்கல் போலீசில் புகார்  செய்தார். விசாரணையில் கோவாவில் உள்ள ஒரு லாட்ஜில் நயனா வாலிபர்  ஒருவருடன் தங்கி இருப்பது தெரிந்தது. போலீசார் அவரை விசாரணைக்காக காவல்  நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்திவிட்டு திரும்பி வந்தனர்.

இதையடுத்து  நேற்று முன்தினம் இரவு நயனா பெற்றோர் வீட்டுக்கு வந்தார். பின்னர் அனைவரும் வழக்கம்போல் தூங்க சென்றனர். நள்ளிரவில் சுபாசின் தம்பி சுரேஷ் அவருக்கு போன்  செய்தார். நீண்ட நேரம் ஆகியும் போனை யாரும்  எடுக்கவில்லை. இதனால் சந்தேகம்  அடைந்த சுரேஷ், அண்ணனின் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் சுபாஷ், அவரது மனைவி  கீதா, மகள் நயனா ஆகிய 3 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து  கிடந்தனர்.தகவல் அறிந்து வந்த போலீசார் 3 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மகள் காதலனுடன் ஓடியதால் அவமானம் தாங்காமல் அவரை கொலை செய்து விட்டு கணவன், மனைவி தற்கொலை செய்து இருக்கலாம்  என கூறப்படுகிறது. இது தொடர்பாக அக்கம் பக்கத்திலும் போலீசார் விசாரித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே உண்மையான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: