சென்னை: அம்மா திட்டத்தின் பெயரை முதல்வர் சிறப்பு குறை தீர்ப்பு திட்டம் என மாற்றி மக்களை ஏமாற்றுவதா என முதல்வர் எடப்பாடிக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:வருவாய்த்துறை மூலம் அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவையை வழங்குவதற்கு முதல்வராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில் தொடங்கப்பட்டது அம்மா திட்டம். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2013ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் அம்மா திட்டத்தை தொடங்கி வைத்தார். அம்மா திட்டத்தின் மூலம் முதல் ஆறு மாத காலத்திற்குள் தமிழகத்தில் உள்ள 16,671 வருவாய் கிராமங்களுக்கும் சென்று குறைகள் தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.