காஞ்சிபுரம் கோவிந்தவாடி அகரத்தில் பயங்கரம் கஞ்சா கும்பல் சரமாரி வெட்டியதில் ஒருவர் பரிதாப பலி; 6 பேர் படுகாயம்

* கஞ்சா போதையில் ஊரையே சூறையாடினர்

* அதிர்ச்சியில் வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்

* பிரபல ரவுடி உள்ளிட்ட 7 பேர் கைது

சென்னை1: காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரத்தில் பட்டாக் கத்தியுடன் வந்த கஞ்சா கும்பல் ஊரையே சூறையாடியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் கோவிந்தவாடி அகரம் உள்ளது. இப்பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கஞ்சா மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகமாகி அடிக்கடி ஊரில் தகராறு ஏற்பட்டு வந்தது.  இந்நிலையில், ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட  ரவுடி புருஷோத்தமன் (45), கோவிந்தவாடி அகரத்தில் ஏற்கனவே பெருந்தனக்காரராக இருந்த மகாதேவன் என்பவர் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு வந்து மிரட்டிவிட்டுச் சென்றுள்ளார். இரவே மகாதேவன் பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனே, பாதுகாப்புக்கு வந்த 5 போலீசாரில் 4 பேர் திரும்பிச் சென்றுள்ளனர். ஒரு காவலர் மட்டும் பாதுகாப்புக்கு இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் முகமூடி அணிந்து 10 பைக்குகளில் வந்த 20 பேர் கொண்ட கஞ்சா கும்பல் கோவிந்தவாடி அகரம் ஊருக்குள் வந்து பட்டாக்கத்தியுடன் மகாதேவன் வீட்டின் முன்பு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மகாதேவனின் தம்பியான மளிகைக் கடை வைத்துள்ள தனஞ்செழியன் தட்டிக் கேட்டுள்ளார். கஞ்சா போதையில் இருந்த ரவுடி புருஷோத்தமன் மற்றும் கூட்டாளிகள் தனஞ்செழியன் மற்றும் உடன் வந்தவர்களை கத்தியால் சரமாரியாக வெட்டி உள்ளனர்.  இதில் கழுத்தில் வெட்டுப்பட்ட தனஞ்செழியன் (45) ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். இவருக்கு மனைவி  பாக்கியலட்சுமி (40)  மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.மேலும் கஞ்சா கும்பல் தாக்கியதில் சஞ்சீவிராயன் (60), மனைவி ராதா (55), மகன்கள் தட்சிணாமூர்த்தி (28),  யதேந்திரன் (25), உறவினர்கள் சுபாஷினி (35), தேவகி (60) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

உடனடியாக அங்கிருந்து  கஞ்சா கும்பல் பைக்கில் அரக்கோணத்திற்கு தப்பிச் சென்றுள்ளனர். போகும் வழியில் கம்மவார் பாளையம், புள்ளலூர், தக்கோலம் பகுதிகளில் வழியில் வந்தவர்களிடம் எல்லாம் தகராறு செய்தும், தாக்குதல் நடத்தி விட்டும் கண்ணுக்கு தெரிந்தவர்கள் மீது எல்லாம் கத்தியால் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதை பார்த்து தெரு, சாலையில் சென்றவர்கள் அனைவரும் உயிருக்கு பயந்து ஆங்காங்கே வீடுகளில் புகுந்தனர். கஞ்சா கும்பலால் தாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் ஊரே சோகத்தில் மூழ்கியது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக காயம் அடைந்தவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாலுசெட்டிச்சத்திரம் போலீசார் உயிரிழந்த தனஞ்செழியன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவத்தால் கோவிந்தவாடி அகரம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. தொடர்ந்து, அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாலுசெட்டிச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், பாலுசெட்டி சத்திரம் போலீசார் அளித்த தகவலின்பேரில் அரக்கோணம் போலீசார் ரவுடி புருஷோத்தமன் உள்ளிட்ட 7 பேரை அரக்கோணத்தில் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

போலீசில் புகார் கொடுத்ததால் ஜாமீனில் வந்ததும் பழிதீர்த்த ரவுடி

கோவிந்தவாடி அகரம் வன்முறை குறித்து நடந்த விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள் வருமாறு: கோவிந்தவாடி அகரம் பகுதியில் அரக்கோணம் சாலையை ஒட்டி அதிக அளவில் ரியல் எஸ்டேட் பிளாட்டுகள் போடப்பட்டுள்ளன. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இந்த பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் பகுதியில் ரவி என்பவர் வாட்ச்மேனாக வேலை பார்த்துள்ளார். அப்போது அந்தப் பகுதிக்கு வரும் ரவுடி புருஷோத்தமன் கும்பல் மது மற்றும் கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரவி ஊர் பெருந்தனக்காரராக இருந்த மகாதேவனிடம் புகார் அளித்துள்ளார். எனவே, ரவியை ரவுடி புருஷோத்தமன் கும்பல் அடித்து தூக்கி வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து மகாதேவன் கண்டித்தும் தொடர்ந்து தகாத செயல்களில் ரவுடி புருஷோத்தமன் ஈடுபட்டு வந்ததால் பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் ரவி புகார் அளித்துள்ளார். இதனால் போலீசார் புருஷோத்தமனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த புருஷோத்தமன், மகாதேவனிடம், உன்னால்தான் எனக்கு 3 லட்சம் செலவானது, உன்னை பழிதீர்க்காமல் விடமாட்டேன் என அடிக்கடி மிரட்டி வந்துள்ளார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு மகாதேவன் நெல் விற்று வைத்திருந்த பணம் சுமார் மூன்றரை லட்சத்தையும் ரவுடி புருஷோத்தமன் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இதற்கெல்லாம் ஒட்டுமொத்தமாக பழிதீர்க்கவே ரவுடி புருஷோத்தமன் ஊரையே சூறையாடிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

சிசிடிவி கேமரா உடைப்பு

கோவிந்தவாடி அகரத்துக்கு பட்டாக் கத்தியுடன் வந்த கஞ்சா கும்பல் தேவகி என்பவரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை அடித்து நொறுக்கியதுடன், சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க்கையும் கழற்றி எடுத்துச் சென்றுள்ளனர். இதனை தடுக்க வந்த தேவகியையும் கஞ்சா கும்பல் சரமாரியாக தாக்கி உள்ளது.

போலீசார் மெத்தனம்

ரவுடி புருஷோத்தமன் பெருந்தனக்காரராக இருந்த மகாதேவன் வீட்டிற்கு வந்து மிரட்டிவிட்டுச் சென்றுள்ளார். அவரின் புகாரின்பேரில் வந்த போலீசார் பாதுகாப்பாக இல்லாமல் உடனடியாக சென்றுவிட்டனர். மேலும் ஏற்கனவே ரவுடி புருஷோத்தமன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்தும் போலீசார் சுதந்திரமாக நடமாட விட்டுள்ளனர். இதனால் ரவுடி புருஷோத்தமன் பட்டாக் கத்தியுடன் வந்து தைரியமாக வெட்டிச் சாய்த்துள்ளான். பாதுகாப்புக்கு வந்த போலீசார் தொடர்ந்து இருந்திருந்தால் உயிரிழப்பை தடுத்திருக்கலாம். போலீசாரின் மெத்தனமே உயிரிழப்புக்கு காரணமாகி விட்டது என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

Related Stories: