நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி அருகே சுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் சடலத்தை மேம்பாலத்தில் இருந்து கயிறு கட்டி கீழே இறக்கி தகனம் செய்த வேதனை சம்பவம் நடந்துள்ளது.வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் குப்பன்(55). வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில் பகுதியில் மாமனார் வீட்டில் மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு குப்பன் புத்துக்கோயில் அருகே நடந்த விபத்தில் சிக்கி இறந்தார். அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்கு பின்னர், உறவினர்கள், வீட்டுக்கு கொண்டு சென்றனர். இறுதிச்சடங்கு முடிந்து சடலத்தை அந்த கிராமத்தில் இருந்து 1 கி.மீ. தூரம் பாலாற்றின் கிளையான ஆற்றங்கரையோரம் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர். வழியில் உள்ள ஒரு நிலத்தின் உரிமையாளர் நிலத்தை சுற்றி முள்வேலி அமைத்து வழிவிட மறுத்ததாக கூறப்படுகிறது.