மணமேல்குடி: புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து, படகையும் பறிமுதல் செய்தது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து நேற்று முன்தினம் 232 விசைப்படகுகளில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்களுடன் கோட்டைபட்டினத்தை சேர்ந்த மணிகண்டன்(31), பாலகிருஷ்ணன்(47), கார்த்திக்(22), சதீஷ்(21) ஆகிய 4 பேர் படகில் சென்றனர். இவர்கள் நெடுந்தீவு அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், இவர்களது படகை சுற்றி வளைத்து எல்லை தாண்டி வந்ததாக 4 மீனவர்களையும் சிறைபிடித்து படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். தகவலறிந்த மீனவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.