பரமக்குடி அருகே டூவீலர் மீது கார் மோதி தந்தை, 2 மகள் உள்பட 4 பேர் பலி

பரமக்குடி: பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலை சந்திப்பில் டூவீலர் மீது கார் மோதி, 2 மகள்கள், தந்தை உட்பட 4 பேர் பலியாயினர். ராமநாதபுரம் அருகே சாத்தான்குளத்தை சேர்ந்த தொழிலதிபர் உஸ்மான் (55). இவரது மகள்கள் ஹைனுல் அரசியா, தஸ்லீமா பானு ஆகியோர் திருமணமாகி மலேசியாவில் வசித்து வந்தனர். அங்கு ஓட்டல் நடத்தி வந்தனர். இவர்கள் நேற்று மலேசியாவில் இருந்து விமானத்தில் மதுரை வந்தனர். இவர்களை அழைத்து செல்ல, உஸ்மான் நேற்று மதுரை விமான நிலையத்திற்கு காரில் சென்றார். அங்கிருந்து 2 மகள்கள் மற்றும் மருமகன்களுடன் ராமநாதபுரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

பரமக்குடி அருகே சோமநாதபுரம் நான்கு வழிச்சந்திப்பில் கார் சென்றபோது, பரமக்குடி, மணி நகரை சேர்ந்த சங்கர் (54) டூவீலரில் சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக  கார், சங்கரின் டூவீலர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சங்கர், சம்பவ இடத்திலேயே இறந்தார். டூவீலர் மீது மோதிய கார் நிலைதடுமாறி, சாலை தடுப்புச்சுவரின் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரில் இருந்த உஸ்மான், அவரது மகள்கள் ஹைனுல் அரசியா, தஸ்லீமா பானு ஆகியோர் படுகாயம் அடைந்து இறந்தனர். மருமகன் முகமது ஹசாலி, டிரைவர் செந்தில்குமார் காயத்துடன் தப்பினர்.

Related Stories: