மேட்டூர்: ஒகேனக்கல், மேட்டூருக்கு நீர்வரத்து விநாடிக்கு 27 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 116 அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் மழை தணிந்தது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒகேனக்கல்லில் நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 8 மணி நிலவரப்படி 27 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. எனினும் அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் 13வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டது.
இதேபோல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 33 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து,நேற்று காலை 27 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக, விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதமும், கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 500 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. திறப்பை விட, அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 114.85 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று மாலை 116 அடியானது. அணையின் நீர் இருப்பு 86.95 டிஎம்சியாக உள்ளது. கர்நாடகத்தில் மழை குறைந்து நீர்வரத்து சரிந்துள்ளதால் அணை நிரம்ப சற்று தாமதம் ஏற்படும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.