திருமங்கலம் அருகே புள்ளிமான் மீட்பு

திருமங்கலம்: திருமங்கலம் அருகே தெருநாய்களிடமிருந்து, புள்ளிமான் மீட்கப்பட்டது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சூரக்கோட்டை, நேசனேரி, சிவரக்கோட்டை, ராயபாாளையம், மீனாட்சிபுரம், எஸ்பி.நத்தம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை ஒட்டி உள்ள கண்மாய் பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள் திரிகின்றன. அருகில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது மான்கள் வருவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில், சிவரக்கோட்டை-எஸ்பி.நத்தம் சாலை பகுதியில் சுமார் 2 வயதுள்ள பெண் மான் குடிநீர் தேடி வந்தது.

அப்பகுதியில் இருந்த தெருநாய்கள், மானை துரத்தி பிடிக்க முயன்றன. அங்கிருந்து தப்பியோடிய மான் அருகில் உள்ள தனியார் தோட்டத்து கம்பி வேலியில் சிக்கி கொண்டது. இதனை பார்த்த அப்பகுதிமக்கள் நாய்களை விரட்டி, வேலியில் சிக்கிய மானை மீட்டனர். வேலியில் சிக்கியதால், அந்த மானுக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தன. இதனையடுத்து சிவரக்கோட்டை கால்நடை மருத்துவமனையில் மானை சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மானுக்கு உரிய சிகிச்சையளிக்கப்பட்டது. மான் பிடிபட்டது குறித்து உசிலம்பட்டி வனத்துறையினருக்கு, கால்நடை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: