கன்னியாகுமரி: குமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென கடல்மட்டம் உயர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த மண் அரிப்பினால் கரையோரப் பகுதி வீடுகள் பாதிக்கும் சூழல் இருப்பதால் அலைதடுப்புச்சுவர் அமைக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை தொடர்ந்து மீன்பிடி படகுகள் அனைத்தும் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை பகுதியான நீண்டகரை முதல் நீரோடி வரையிலான அரபிக்கடல் பகுதிகளில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் கடல் மட்டம் உயர்ந்து சீற்றத்துடன் காணப்படுவது வழக்கம்.
அதன்படி குளச்சல், கொட்டில்பாடு, வாணியக்குடி, கடியப்பட்டணம் பகுதிகளில் தற்போது கடல் நீர்மட்டம் உயர்ந்து கடல் சீற்றத்தோடு காணப்படுவதோடு மட்டுமன்றி கடல் அரிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 10 அடி உயர மண் மேடு அரித்து செல்லப்பட்டதோடு கடல் நீர் வீடுகளுக்குள் புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. குளச்சல் துறைமுகப் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பால் பழுதடைந்த நிலையில் உள்ள துறைமுக பாலத்தின் தூண்களை மூடியிருந்த மண்ணும் அரித்து செல்லப்பட்டது. இதனால் பலமானது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களிலும் கடல் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் கரையோர வீடுகளை பாதுகாக்கும் வகையில் அலை தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.