பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர நிதியுதவி கேட்டு ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே கடிதம்

சென்னை: நிதியுதவி கேட்டு ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின் கடிதம் அனுப்பியுள்ளார். பயணிக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தர கூடுதல் நிதி ஒதுக்குமாறு கடிதத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31ம் தேதி வரை 22 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாகவும், முறையான கணக்குடன் அதற்கான ரசீதுகள் உள்ளது என்றும், மேலும் 40 கோடி ரூபாய்க்கான செலவு ரசீதுகள் தயாராக உள்ளதாகவும் கடிதத்தில் ராகுல் ஜெயின் குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து ஒப்பந்ததாரர்களுக்கு ஏற்கனவே 39 கோடி ரூபாய்க்கான பில் கொடுக்க வேண்டி இருப்பதாகவும், ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை செய்யப்படும் பணிகளுக்கான பில்களுக்கு மட்டுமே தற்போது உள்ள நிதி போதுமானதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதை அடுத்து தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் ஒப்பந்ததாரர்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலைக்கும் மற்றும் மூலப்பொருட்கள் வாங்க முடியாத அளவிற்கும் தள்ளப்பட்டுள்ளனர். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு கடந்த நிதியாண்டை விட இந்த ஆண்டு கூடுதல் நிதி ஒதுக்க ரயில்வே வாரியத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நிதி பற்றாக்குறை காரணமாக அடுத்த ஒரு சில வாரங்களில் 110 ரயில்களில் பராமரிப்பு பணிகளை நிறுத்த வேண்டிய சூழல் உருவாகியிருப்பதாகவும் குறிப்பிட்டு தெற்கு பொது மேலாளர் ராகுல் ஜெயின் ரயில்வே வாரியத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Related Stories: