இந்தியா-பாகிஸ்தான் இடையை நிலவும் பதற்றத்தை தணிக்க வேண்டும்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் டுவிட்

வாஷிங்டன்: இந்தியா-பாகிஸ்தான் இடையை நிலவி வரும் பதற்றத்தை தணிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து,  அதை 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு சமீபத்தில் பிரித்தது. இதற்கு  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான், இப்பிரச்னையை சர்வதேச அரங்கில் கிளப்ப முயற்சி மேற்கொண்டது. இந்த  விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற வகையில், மூடிய அறைக்குள் கூட்டத்தை கூட்டி விவாதிக்கலாம் என சீனா கூறியது. இதனை ஏற்று கடந்த 16-ம் தேதி ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. அதன்படி, நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இப்பிரச்னை பற்றி பேசப்பட்டது. ஆனால், அதில் சீனா மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்ததாகவும், மற்ற நாடுகள் அதை  நிராகரித்ததோடு, இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என கூறி இந்தியாவுக்கு ஆதரவு  தெரிவித்தன. இதனால் இப்பிரச்னையை சர்வதேச பிரச்னையாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சி  தோல்வியடைந்தது.

இதற்கிடையே, கடந்த 16-ம் தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொலைபேசி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ‘காஷ்மீரில் இந்தியா  மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தானின்  கவலையை வெளியிட்ட அவர், இந்த நடவடிக்கை பிராந்திய அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக இருக்கும்’ என்றும் கூறினார்.  இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் நேற்று போனில் 30 நிமிடங்கள் பேசினார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவலில்  கூறியிருப்பதாவது: இரு தரப்பு மற்றும் பிராந்திய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் மனம் திறந்து பேசினர். ஜப்பானின் ஒசாகா நகரில் கடந்த ஜூன் மாதம் இறுதியில் நடந்த ஜி20 மாநாட்டில்  இருவரும் சந்தித்து பேசிய விஷயங்களை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். இரு நாடுகளும் பயனடையும் வகையில், வர்த்தக வாய்ப்புகள் குறித்து இந்திய வர்த்தக அமைச்சர் மற்றும் அமெரிக்க  வர்த்தக பிரதிநிதி விரைவில் சந்தித்து பேசுவர் என டிரம்பிடம், மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில், சில தலைவர்கள் பேசுவது அமைதிக்கு நல்லதல்ல எனவும் மோடி குறிப்பிட்டார். எல்லை தாண்டிய தீவிரவாதம் இல்லாத சூழலை  உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார். வறுமை, கல்வி அறிவின்மை மற்றும் நோய்களை ஒழிப்பதை யார் செய்தாலும், அவர்களின் பாதையை பின்பற்ற இந்தியா  ஒத்துழைப்பு அளிக்கும் என பிரதமர் உறுதி அளித்தார். முழு சுதந்திரமான ஆப்கானிஸ்தான் உருவாவதற்கு பணியாற்ற  இந்தியா நீண்டகாலமாக உறுதியாக உள்ளது என்பதையும் மோடி  தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்தை பதிவுசெய்துள்ளார். எனது நண்பர்களான இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான்  பிரதமர் இம்ரான் கானிடம் பேசினேன் என்றும் வர்த்தகம் தொடர்பாகவும் இருநாட்டு தலைவர்களுடன் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான்  இடையை நிலவி வரும் பதற்றத்தை தணிக்கவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஒரு கடினமான சூழ்நிலை, ஆனால் நல்ல உரையாடல்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசியது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை, இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை குறைத்து,  இரு நாடுகளும் அமைதியை நிலை நாட்ட வேண்டும் என பிரதமர் மோடியிடம் டிரம்ப் பேசியதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: