திருவொற்றியூர்: திருவொற்றியூரில் குடியிருப்புக்கு மத்தியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவொற்றியூர் டி.எஸ்.ஆர்.நகர் ஒத்தவாடை தெருவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள ஒரு வீட்டின் மாடியில் செல்போன் டவர் அமைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இது சம்மந்தமான ஆட்சேபனை கடிதத்தை திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளிடம் கொடுத்தனர். ஆனால், அதையும் மீறி அந்த வீட்டில் செல்போன் டவர் அமைப்பதற்கான கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.