ஆலந்தூர்: கிண்டி - பரங்கிமலை இடையே ரயில்வே சுரங்கப்பாதை பணி கிடப்பில் போடப் பட்டுள்ளதால் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. கிண்டி - பரங்கிமலை ரயில் நிலையங்களுக்கு இடையே ஆலந்தூர் பச்சையம்மன் கோயில் ரயில்வே கேட் இருந்தது. வேளச்சேரியில் இருந்து தினசரி ஆலந்தூருக்கும், ஆலந்தூரில் இருந்து வேளச்சேரிக்கும் வேலைக்கு, பள்ளிக்கு, மார்க்கெட்டுக் நடந்து செல்லும் 5 ஆயிரத்தும் மேற்பட்டவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த ரயில்வே கேட்டை பயன்படுத்தி வந்தனர். இங்கு, அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டதால், ரயில்வே கேட்ைடை (எண்: 14) மூடுவதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி கடந்த 2017ம் ஆண்டு இந்த ரயில்வே கேட் மூடப்பட்டது. இந்த பாதையில் 2.50 கோடி மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டு பணியும் தொடங்கியது.
வேளச்சேரிக்கு செல்லும் பாதையின் ஒருபகுதியில் மட்டும் பள்ளம் தோண்டப்பட்டு கான்கிரீட்டினால் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. அதற்கு பிறகு எந்த பணியும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. விபத்தை தவிர்ப்பதற்காக தொடங்கப்பட்ட சுரங்கப்பாதை பணி பாதியில் நின்று விட்டதால் அவசரத்துக்கு தண்டவாளத்தை கடந்து செல்பவர்களால் மீண்டும் உயிரிப்புகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்த ரயில்வே சுரங்கப்பாதை பணியினை விரைவில் முடிக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.