×

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை ஒகேனக்கல்லில் நீர்வரத்து 30,000 கனஅடியானது: மேட்டூர் அணை நீர்மட்டம் 115 அடியாக உயர்வு

பென்னாகரம்: ஒகேனக்கல்லில் நீர்வரத்து விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டமும் 115 அடியாக உயர்ந்துள்ளது.கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால், ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனிடையே, கடந்த சில தினங்களாக காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், கர்நாடக  அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரும் வெகுவாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் காலை, ஒகேனக்கல்லில் 27 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இரவு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

இது நேற்று காலை 8 மணி நிலவரப்படி, விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. பின்னர், மாலை 4 மணி நிலவரப்படி 30 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. எனினும் அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் 12வது நாளாக  தடை நீட்டிக்கப்பட்டது.
இதே போல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 27 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இது மாலை 4 மணிக்கு 29 ஆயிரம் கனஅடியானது. இரவு 8 மணி நிலவரப்படி, அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 30 ஆயிரம்  கனஅடியாக அதிகரித்தது. நேற்று மாலை 34 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10,000 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு  வருகிறது. திறப்பை காட்டிலும், வரத்து அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 114.05 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று மாலை 115.30 அடியாக உயர்ந்தது. அணையின் நீர் இருப்பு 86.17 டி.எம்.சியாக  உள்ளது.



Tags : Rain ,Cauvery ,water level, Okanakkal,Mettur Dam
× RELATED பாரதியார் நினைவு தினம் மகாகவி நாள்:...