பலியான மீனவர் குடும்பத்தினருக்கு இழப்பீடு கோரி ஐகோர்ட்டில் வழக்கு

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஞானசுந்தரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் சிந்தாஸ் உள்ளிட்ட 4 மீனவர்கள், கடந்த ஜூலை 4ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மறுநாள் ஆகியும் கரை திரும்பவில்லை. என் கணவர் சடலமாக, திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டார். 4 நாட்கள் உயிருக்கு போராடிய பின்பே இறந்துள்ளார். இதற்கு பேரிடர் மேலாண் குழுவின் அலட்சியமே காரணம். எனவே, எனது கணவர்  இறப்பிற்கு இழப்பீடாக, 20 லட்சம் வழங்கவும், எனக்கு அரசு வேலை  வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், மனு பேரிடர் மேலாண் துறை செயலர், மீன்வளத்துறை செயலர் மற்றும் உதவி இயக்குநர், ராமநாதபுரம் கலெக்டர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை  2 வாரம் தள்ளி வைத்தார்.

Related Stories: