சென்னை: ஆவின் பால் விலை உயர்வு என்பது வாக்களித்த ஏழை, எளிய மக்கள் மீது அதிமுக அரசு தொடுக்கும் தாக்குதல் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தமிழக அரசு ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தியுள்ளது. இதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): பால் விலை உயர்வு என்பது சாதாரண மக்களுக்கு சிரமம். பால் உற்பத்தியாளர்களும் பயன் அடையவேண்டும். அதே சமயம் நுகர்வோர் மீதும் சுமையை ஏற்றக்கூடாது. அதற்காக அரசு மானியம் கொடுக்கவேண்டும்.பொன்குமார் (தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர்): கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களான அடித்தட்டு மக்களுக்கு பல நேரங்களில் உணவிற்கு மாற்றாக தேனீர், காபி போன்றவை அமைகிறது. ஒவ்வொரு உடலுழைப்பு தொழிலாளியும் தன்னுடைய கடும் உழைப்பிற்கு 4 முதல் 6 டீ வரை ஒவ்வொரு நாளும் குடிக்க வேண்டியுள்ளது. இந்த பால் விலை உயர்வால் ஏற்படும் டீ, காபி போன்றவற்றின் விலை உயர்வை ஈடுகட்ட தன்னுடைய ஒரு நாள் ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை இழக்க வேண்டி நேரிடும். . எனவே இந்த பால் விலை உயர்வால் நேரடியாகப் பாதிக்க கூடியவர்கள் ஏழை, எளிய மக்களும் அமைப்புசாராத் தொழிலாளர்களுமே. அதிமுக ஆட்சியில் மூன்று முறை பாலின் விலை அபரிமிதமாக உயர்த்தப்பட்டுள்ள கொடுமை நேர்ந்துள்ளது. இது அதிமுக அரசு தனக்கு வாக்களித்த ஏழை, எளிய மக்கள் மீது தொடுக்கும் கொடூர தாக்குதலாகும். எனவே அரசு உடனடியாக பால் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.