சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த வாரம் இறுதியில் வெளிநாடு செல்கிறார். இந்த பயணத்தின்போது அவர் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்து விவாதிக்க தமிழக அமைச்சரவை விரைவில் கூடுகிறது. அப்போது பொறுப்பு முதல்வர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற 29ம் தேதி அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட சில நாடுகளுக்கு செல்கிறார். அவருடன் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தொழில் துறை அமைச்சர் சம்பத், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் உள்ளிட்டவர்கள் மற்றும் அந்த துறை செயலாளர்கள், அதிகாரிகள் குழுவும் செல்கிறார்கள்.முதல்வர் வெளிநாடு செல்லும்போது, தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு சில வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். முதல்வர் வெளிநாட்டில் சுமார் இரண்டு வார காலம் தங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது. முதல்வர் வெளிநாடு செல்ல இருப்பதையொட்டி, இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு அதிகாரிகள் செய்து வருகிறார்கள். முன்னதாக, அதிகாரிகள் குழு ஒன்றும் வெளிநாடு செல்கிறது.