ஜெய்ப்பூர்: `‘மோடி பிரதமரான பின்னரே நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டது என்று கூறுவது தவறு’’ என்று ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 75வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ராஜஸ்தான் மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் புதிய திட்டங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் தொடர்பான இரண்டு நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு பேசிய இம்மாநில முதல்வர் அசோக் கெலாட், நாட்டின் வளர்ச்சிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜவகர்லால் நேரு. இதற்கான காங்கிரஸ் அரசின் பங்களிப்பு மிகப்பெரியது. கடந்த பல ஆண்டுகளாக நாட்டின் ஜனநாயகத்தை காங்கிரஸ் அரசு வலுப்படுத்தி வந்துள்ளது. அதனால்தான் மோடி கூட பிரதமராக முடிந்தது’’ என்று தெரிவித்தார்.