திருமலை: தெலுங்கு தேசம் முன்னாள் அமைச்சர் ஆதிநாராயண ரெட்டி, பாஜ.வில் சேரப்போவதாக கூறப்படுகிறது.ஆந்திராவின் ஜம்மலமடுகு தொகுதியில் மூன்று முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர் ஆதிநாராயண ரெட்டி. 2014ம் ஆண்டு தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜம்மலமடுகு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து அமைச்சராக பதவி வகித்தார்.
இதையடுத்து இந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஜம்மலமடுகு தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்காக ஆதிநாராயண ரெட்டி தெலுங்கு தேசம் கட்சியில் வாய்ப்பு கேட்டார். ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படாமல் முன்னாள் அமைச்சர் ராமசுப்பா ரெட்டிக்கு வழங்கப்பட்டது. ஆதிநாராயண ரெட்டிக்கு கடப்பா தொகுதி எம்பியாக தெலுங்கு தேசம் கட்சியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அவினாஷ் ரெட்டியிடம் தோல்வியை தழுவினார்.