×

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் 12,000 ஏக்கர் சதுப்பு நிலம் ஆக்ரமிப்பு

* ஐகோர்ட்டில் பரபரப்பு அறிக்கை தாக்கல்
* விளக்கம் அளிக்க அரசுக்கு 2 நாள் கெடு

சென்னை: சென்னை பள்ளிகரனை சதுப்பு நிலத்தை மத்திய அரசு நிறுவனங்கள் 100 ஏக்கருக்கும் மேல் ஆக்கிரமித்துள்ளன என்றும் சென்னை மாநகராட்சியால் 70 ஹெக்டேர் சதுப்பு நிலம் குப்பை கிடங்காகிவிட்டது. மொத்தமாக 12,000 ஏக்கர்  நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்றம் நியமித்த அதிகாரி ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளார். சதுப்பு நிலங்களை பாதுகாக்க ஒவ்வொரு மாநில உயர்நீதிமன்றங்கள் தானாக முன்வந்து வழக்குகளை பதிவு செய்து உரிய உத்தரவுகளை பிறப்பித்து சதுப்பு நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  அதன்படி, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, நீதிமன்ற விசாரணைக்கு உதவும் வகையில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமனை நியமித்து கழிவேலி,  பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் உள்ள சதுப்பு நிலங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய  அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கழுவேலி, பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட ஆய்வறிக்கையை மூத்த  வக்கீல் பி.எஸ்.ராமன் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பல்வேறு தரப்பினர்  ஆக்கிரமித்துள்ளனர். கடந்த 1965ல் 5 ஆயிரத்து 500 ஹெக்டேராக இருந்த சதுப்பு நிலம், 2013ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 600 ஹெக்டேராக சுருங்கி விட்டது. (1 ெஹக்டேர் - 2.47 ஏக்கர்)
  பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையொட்டி மாநகராட்சியின் 70 ஹெக்டேர் பரப்பில் இரண்டு குப்பைகிடங்குகள் உள்ளன. இதனால், நீர் ஆதாரம் மற்றும் தாவரங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை  1,085  குடியிருப்புகள் ஆக்கிரமித்துள்ளன. எல்காட் வளாகத்திற்குள் 2 ஏரிகள் உள்ளன. பறக்கும் ரயில் நிலையம் அமைப்பதற்காக 100 ஏக்கர் சதுப்பு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

மேலும் 20.25 ஏக்கர் சதுப்பு நிலத்தை தேசிய கடல் சார் கல்வி நிறுவனம்,  மத்திய காற்றாலைகள் நிறுவனம், மற்றும் பல தனியார் ஐ.டி நிறுவனங்கள் ஆகியவை ஆக்கிரமித்துள்ளன.பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு மேற்கு மற்றும் தெற்காசிய நாடுகளில் இருந்தும், மாலத்தீவு போன்ற தீவுகளில் இருந்தும் பிளமிங்கோ, பிளாக் டெயில் காட்விட், பெலிகான் போன்ற பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்தன. ஆனால்,  பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உயர் மின் கோபுரங்களால், அங்கு வரக்கூடிய அரிய வகை பறவைகள் இனங்கள் தற்போது வருவதில்லை. மேலும், மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 70 ஹெக்டேர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள  குப்பை கிடங்குகளை அகற்ற வேண்டும்.   அதேபோல, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கழுவேலி சதுப்பு நிலம், 600 சதுர கிலோமீட்டரிலிருந்து 75 சதுர கிலோமீட்டர் அளவிற்கு சுருங்கிவிட்டது. அங்கு சட்டவிரோதமாக இறால் பண்ணைகள் செயல்படுகின்றன. அவற்றை  அகற்ற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, கோவையில் உள்ள வேடப்பட்டி, புதுகுளம் உள்ளிட்ட  47 நீர்நிலைகளில் தூர்வாரும் போது,மரங்கள் வெட்டப்படுகின்றன. மரங்களை பாதுகாக்க கோரி கோவையை சேர்ந்த மோகன் குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு  தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவும் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆய்வறிக்கை தொடர்பாக தமிழக அரசு வரும் நாளைக்குள்(21ம் தேதி) பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.

* கடந்த 1965ம் ஆண்டு 5 ஆயிரத்து 500 ஹெக்டேராக இருந்த சதுப்பு நிலம், 2013ம் ஆண்டு கணக்கெடுப்பில் 600 ஹெக்டேராக சுருங்கி விட்டது.
* பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையொட்டி மாநகராட்சியின் 70 ஹெக்டேர் பரப்பில் இரண்டு குப்பைகிடங்குகள் உள்ளன. இதனால், நீர் ஆதாரம் மற்றும் தாவரங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
* பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை  1,085 குடியிருப்புகள் ஆக்கிரமித்துள்ளன.
* தமிழக அரசின் எல்காட் வளாகத்திற்குள் 2 ஏரிகள் உள்ளன. பறக்கும் ரயில் நிலையம் அமைப்பதற்காக 100 ஏக்கர் சதுப்பு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.



Tags : Chennai school , 12,000 acres , marshy land
× RELATED நத்தம் பகுதியில் பொங்கலையொட்டி களைகட்டும் மாட்டு சலங்கைகள் விற்பனை