×

துறையூர் அருகே கோயில் விழாவுக்கு சென்றபோது ஆட்டோ கிணற்றில் பாய்ந்தது... 8 பேர் பலியான கிராமம் சோகத்தில் மூழ்கியது

துறையூர்: கோயில் விழாவுக்கு சென்றபோது லோடு ஆட்டோ கிணற்றில் பாய்ந்தது. அதில் இருந்த 8 பேர் பலியானார்கள். 9 பேர் படுகாயமடைந்தனர். 8 பேர் பலியான பேரூர் கிராமம் சோகத்தில் மூழ்கியது. எங்கு பார்த்தாலும் மரண ஓலம் கேட்கிறது. அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. அனைத்து கட்சியினரும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ளது பேரூர். இந்த ஊரை சேர்ந்த வர் குணசீலன் (63). இவர் திருச்சி மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மகன் சதீஷ்குமார் (30), கோவை தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சதீஷ்குமாருக்கும் துயைூர் அடுத்த எஸ்.என். புதூர் சுசீலாவுக்கும் (24) 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. எஸ்.என். புதூரில் கடந்த சில நாட்களாக கோயில் திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி நேற்று கிடா விருந்து நடந்தது. இதில் கலந்து கொள்ளும்படி சுசீலாவின் குடும்பத்தார், சம்பந்தி குணசீலன் குடும்பத்தினரை அழைத்திருந்தனர். சதீஷ்குமார், சுசீலா ஏற்கனவே எஸ்.என். புதூர் சென்று விட்டனர்.

நேற்று காலை 12 மணி அளவில் குணசீலன், அவரது மனைவி எழிலரசி (55) மற்றும் உறவினர்கள், குழந்தைகள் உள்பட 16 பேர் ஒரு லோடு ஆட்டோவில் எஸ்.என். புதூர் புறப்பட்டனர். ஆட்டோவை பேரூரை சேர்ந்த இளையராஜா (36) என்பவர் ஓட்டினார். டிரைவர் கேபினில் டிரைவருடன் குணசீலன், அவரது மனைவி ஆகியோர் அமர்ந்திருந்தனர். மற்றவர்கள் பின்னால் லோடு ஏற்றும் பகுதியில் நின்றுகொண்டும், உட்கார்ந்து கொண்டும் வந்தனர். மதியம் 1 மணி அளவில் இந்த லோடு ஆட்டோ எரகுடி அருகே சென்று கொண்டிருந்தது. திடீரென ஆட்டோ டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி ரோட்டை ஒட்டியுள்ள தடுப்பு சுவர் இல்லாத கிணற்றுக்குள் பாய்ந்தது. 70 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் 2 அடி உயரத்திற்கே தண்ணீர் இருந்ததால் அனைவரும் படுகாயமடைந்தனர். விழுந்த அதிர்ச்சியிலும், படுகாயத்திலும் 8 பேர் கிணற்றுக்குள்ளேயே இறந்தனர். மற்றவர்கள் கதறி கூச்சல் போட்டனர்.

தகவல் கிடைத்ததும் உப்பிலியபுரம் போலீசார் மற்றும் தா.பேட்டை, உப்பிலியபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை துவக்கினர். தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கீழே இறங்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மேலே தூக்கி வந்தனர். உடனடியாக அவர்களை துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் ஓய்வுபெற்ற சிறை வார்டன் குணசீலன், அவரது மனைவி எழிலரசி, குணசீலனின் தம்பி ஞானசீலன் மனைவி குமாரத்தி (45), தனபால் மனைவி கோமதி (40), முருகேசன் மனைவி கயல்விழி(35), கயல்விழியின் மகள் சஞ்சனா(4), இளங்கோவன் மகள் யமுனா(10), மகன் சரண் (4) ஆகிய 8 பேர் விபத்து நடந்த கிணற்றுக்குள்ளேயே இறந்து போனார்கள்.

தனபால் மகள் ரோசிகா (13), இளங்கோவன் (46), இளங்கோவன் மகள் லாவண்யா(13), முத்துக்கண்ணு(40), முருகேசன் மகன் ஹரி(5), சரஸ்வதி(46), லோடு ஆட்டோ டிரைவர் இளையராஜா(32), ஆகியோர் படுகாயமடைந்து போராடிக்கொண்டிருந்தனர். அவர்களையும் தீயணைப்பு படையினர் மேலே கொண்டு வந்து உடனடியாக துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு அனைவரும் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இறந்த 8 பேர் உடல்களும் துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. தகவல் அறிந்ததும் துறையூர் இன்ஸ்பெக்டர் குருநாதன், உப்பிலியபுரம் எஸ்.ஐ. இளங்கோவன் மற்றும் திருச்சி கலெக்டர் சிவராசு, எஸ்.பி. ஜியாவுல்ஹக் ஆகியோரும் அங்கு சென்று மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.

கலெக்டர் உத்தரவின்பேரில் சிறப்பு அனுமதியுடன் இரவோடு இரவாக 8 பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இரவு 10.30 மணிக்கு பிரேத பரிசோதனை முடிந்ததும் 8 பேரின் உடல்களும் அவர்களது ஊர்களான பேரூர், கட்டப்பள்ளி கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு திரண்டிருந்த 100க்கும் மேற்பட்டவர்களை அவர்களது ஊருக்கு அரசு சிறப்பு பஸ் மூலம் கலெக்டர் அனுப்பி வைத்தார். விபத்தில் இறந்த கயல்விழி (35), அவரது மகள் சஞ்சனா (4) இவர்கள் இருவரும் கட்டப்பள்ளியை சேர்ந்தவர்கள். மற்ற 6 பேரும் பேரூரை சேர்ந்தவர்கள். ஒரே கிராமத்தில் 6 பேரும், அருகில் உள்ள கிராமத்தில் 2 பேரும் கோர விபத்தில் இறந்ததால், அந்த கிராமம் சோகத்தில் மூழ்கியது. இன்று அந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் எந்த வேலைக்கும் செல்லவில்லை. எங்கு பார்த்தாலும் அழுகை ஓலமாக கேட்கிறது.

விபத்து பற்றி தகவல் அறிந்த முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான கே. என். நேரு, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் பேரூர், கட்டப்பள்ளி சென்ற இறந்தவர்கள் 8 பேரின் உடல்களுக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதுபோல மற்ற கட்சி நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து இன்று 8 உடல்களையும் இறுதி சடங்கு செய்ய ஏற்பாடுகள் தொடங்கியது. பேரூர், கட்டப்பள்ளி ஆகிய 2 கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. அமைச்சர்களும் அங்கு வந்து இரங்கல் தெரிவித்து அரசின் உதவிகளை வழங்க இருப்பதால் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Thuraiyur, Temple Festival
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...