புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிறப்பு சிகிச்சை பிரிவை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்தார். இதன் பின்னர் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு காதொலி கருவிகளை வழங்கினார். அப்போது விஜயபாஸ்கர் கூறுகையில், அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்பவர்கள் எண்ணிக்கை 2 சதவீதமாக இருந்தது. தற்போது தமிழக அரசு எடுத்த முயற்சியில் 19 சதவீதமாக உயர்ந்துள்ளது. டயாலிசிஸ் மிஷின்கள் மாவட்டம் முதல் தாலுகா மருத்துவமனை வரை வழங்கியதன் அடிப்படையில் டயாலிசிஸ் செய்வோரின் எண்ணிக்கை 19 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தற்கொலை செய்து கொள்பவர்கள் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்வதால் அவர்களை உயிர் பிழைக்க வைப்பது மருத்துவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. எலி பேஸ்ட்டில் கொடிய விஷத்தன்மை உள்ளது. எலி பேஸ்ட்டிற்கு தடை விதிப்பது அனைத்து துறையையும் சார்ந்தது. அதனால் அதற்கு தடை விதிக்க தமிழக அரசிடம் சுகாதாரத்துறை சார்பில் பரிந்துரைக்கப்படும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குடிநீர் பிரச்சினை என்பது கிடையாது. அனைத்து மருத்துவமனைகளிலும் தனி பிரிவு அமைக்கப்பட்டு டயாலிசிஸ் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூபாய் 100 கோடியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மையம் தொடங்கப்படும் என்றும் ரூ 10 கோடி மதிப்பில், மேம்படுத்தப்பட்ட சித்த மருத்துவமனை தொடங்கப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.