புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஜ் நகரில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். பிரான்சில் வரும் ஆகஸ்ட் 24 முதல் 26-ஆம் தேதி வரை ஜி7 நாடுகளின் 45-ஆவது உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கடந்த மாதம் கூறுகையில், ஜி7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க வேண்டுமென்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதனை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.
மோடி மீதான தனிப்பட்ட அன்பின் காரணமாக அந்த மாநாட்டில் பங்கேற்க மெக்ரான் அழைப்பு விடுத்தார். அவரது அன்புக்கு மரியாதை அளிக்கும் வகையில் அழைப்பை நமது பிரதமர் ஏற்றுக் கொண்டார். சர்வதேச அளவில் இந்தியா இப்போது பொருளாதார ரீதியாக வலுவாக வளர்ந்து வருகிறது. ஜி7 மாநாட்டில் நமது பிரதமர் பங்கேற்க இருப்பதன் மூலம் சர்வதேச அளவில் நமது வளர்ச்சிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றார்.ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, இத்தாலி ஆகிய நாடுகள் உள்ளன. ஐரோப்பிய யூனியனும் இதில் இடம் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் செல்வ வளமிக்க நாடுகளின் கூட்டமைப்பாக ஜி7 உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் செல்லவுள்ளார். அரசுமுறை பயணமாக வரும் 23, 24-ம் தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும், 24, 25 ஆகிய தேதிகளில் பக்ரைனிற்கும் பிரதமர் மோடி செல்லவுள்ளார்.