பீகார் எம்எல்ஏ வீட்டில் ஏ.கே.47, கையெறி குண்டு கைப்பற்றப்பட்ட விவகாரம்

பீகார்: பீகாரில் உள்ள தனது வீட்டில் ஏ.கே.47 துப்பாக்கி , கையெறி குண்டு ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் சரணடைய உள்ளதாக சுயேச்சை எம்எல்ஏ ஆனந்த குமார் சிங் வீடியோ வெளியிட்டுள்ளார். சுயேச்சை எம்எல்ஏ- வான ஆனந்த குமார் சிங்கின் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கப்பட்டு உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து பாட்னா வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு விரைந்த போலீசார் , ஆனந்த குமார் சிங்கின்  வீட்டில் இருந்து  ஏ.கே.47 துப்பாக்கி , கையெறி குண்டு உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர். சோதனை நடைபெற்ற போது ஆனந்த் சிங், அங்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. அவர் மீது  சட்டவிரோத செயல்பாடுகள்  தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. யூஎபிஎ என்று அழைக்கப்படும் இச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டதால் நிச்சயமாக அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படாது என்று போலீசார் தரப்பில் கூறியிருந்தனர்.

ஆனந்த் சிங்-கை  கைது செய்யவும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தவும் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட ஆனந்த் சிங் நான் தலைமறைவாகவில்லை என்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட என் நண்பரை காண வந்துள்ளேன் என்று கூறினார். ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட வீட்டை கடந்த 14 ஆண்டுகளாக நான்  பயன்படுத்தவே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: