பிரெக்சிட்டுக்குப் பிந்தைய வர்த்தக ஒப்பந்தம்: பிரிட்டன் எட்டுவதில் இழுபறி

பிரிட்டன்: பிரெக்சிட்டுக்குப் பிந்தைய வர்த்தகம் தொடர்பாக ஒப்பந்தம் ஏதும் செய்து கொள்ளாமல் வெளியேறும் பட்சத்தில் பிரிட்டனில் உணவு, எரிபொருள், மருந்துப் பொருட்களுக்கு மிகப்பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்படும் என்று அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு பிரிட்டன்.

ஆனால் சிறிய நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதை விரும்பாத பிரிட்டன் விரைவில் ஒன்றியத்தில் இருந்து விலக உள்ளது. பிரெக்சிட் எனப்படும் இந்த நடைமுறைக்குப் பிறகு பிரிட்டனின் வர்த்தகம் எப்படி அமையப்போகிறது என்பது தொடர்பாக தற்போது வரை ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் எட்டப்படவில்லை. இருப்பினும் பிரெக்சிட் நடைமுறையில் பின்னடைவு ஏற்பட்டு விடக் கூடாது என்று கருதும் அந்நாட்டு அரசு ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளாமலேயே அக்டோபர் 31ஆம் தேதியுடன் வெளியேற முடிவெடுத்துள்ளது.

அவ்வாறு வெளியேறும் பட்சத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் வர்த்தக சலுகைகளை அனுபவித்து வந்த பிரிட்டனுக்கு இனி அந்தச் சலுகை கிடைக்காது. மேலும் அயர்லாந்து உடனான எல்லையில் தடையற்ற சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்து தடைபடும். எனவே உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அவற்றின் விலை உயரக் கூடும் என்றும் அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையானது செய்தி இதழ் ஒன்றின் மூலம் கசிந்துள்ள நிலையில் இதில் அச்சப்படுவதற்கு எதுவுமில்லை என்றும் ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றால் இப்படி தான் நடக்கும் என்பது அனைவரும் அறிந்ததே என்றும் பிரிட்டன் அரசு கூறியுள்ளது. அதேவேளையில் பிரச்சனைகளை சமாளிக்கத் தயார் என்று பிரெக்சிட் பொறுப்பு அமைச்சர் மைக்கேல் கோவ் கூறியுள்ளார்.

Related Stories: