×

FaceApp-ஆல் பறிபோகுது அந்தரங்கம்!

ஃபேஸ் ஆப்தான் கடந்த சில வாரங்களாக உலக வைரல். செலிபிரிட்டிகள் முதல் சின்னஞ்சிறுசுகள் வரை அனைவருமே இந்த ஆப்பை பயன்படுத்தி தங்கள் இளைய, முதிய தோற்றத்தை வரவைத்து அதை ஃபேஸ்புக்கிலும் பிற வலைதளங்களிலும் பகிர்ந்து லைக்கை அள்ளிவருகிறார்கள். ஆப்பிள், கூகுள் ஆப் ஸ்டோர்களில் கடந்த வாரம் உலக அளவில் அதிகம் டவுன்லோடுகளை பெற்று தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருப்பது ரஷ்ய ஸ்டார்ட்அப்பான இந்த ஃபேஸ்ஆப்தான். தற்போது அடித்திருக்கும் ஹிட்டால் இந்த ஜாலி ஆப்பிற்கு பின் பெரிய பிரைவசி ஆபத்து இருக்கலாம் என்ற விவாதங்கள் உலகம் முழுவதும் வெடிக்கத் தொடங்கியுள்ளன.

முதலில் இந்த ஆப் என்ன செய்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இந்த ஆப்பில் நாம் மாற்றங்கள் செய்யவேண்டும் என நாம் நினைக்கும் போட்டோக்களை நாம் தேர்வு செய்கிறோம். அதை இந்த ஆப் அவர்களது சர்வருக்கு அப்லோடு ஆகிறது. அங்கு செயற்கை நுண்ணறிவு வயதாக்குதலோ, இளமையாக்குதலோ... நீங்கள் எந்த ஃபில்டரை தேர்ந்தெடுக்கிறீர்களோ அதை அந்தப் புகைப்படத்தில் செயல்படுத்திவிடும் இது. பின்பு அதை நீங்கள் உங்கள் மொபைலில் பதிவிறக்கிக்கொள்ளலாம். 2017-ல் வெளியாகி அப்போது ட்ரெண்ட் ஆனது முதலே இதே முறையில்தான் இயங்கி
வருகிறது ஃபேஸ்ஆப்.

இதில் என்ன பிரச்னை இருக்கிறது என நீங்கள் கேட்கலாம். ஃபேஸ்ஆப்பின் பிரைவசி பாலிசியில் இது தொடர்பாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயம்தான் இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணம். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் நீங்கள் பதிவேற்றும் புகைப்படங்களை எப்படியும் ஃபேஸ்ஆப் பயன்படுத்திக்கொள்ளமுடியும் என்றே இது குறிப்பிடுகிறது. புகைப்படங்களை சர்வருக்கு அப்லோடு செய்யாமலேயே இந்த சேவையை ஃபேஸ்ஆப்பால் தரமுடியுமே என்பதுதான் முக்கிய கேள்வியாக முன்வைக்கப்படுகிறது. ஆனால் இதற்கு ஃபேஸ்ஆப் காரணமாகச் சொல்வது இந்த ஃபில்டர்களை சரியாக பிசிறில்லாமல் செயல்படுத்துவது மிகவும் கடினம். அதற்கு நிச்சயம் கிளவுட் தேவைப்படும் என்பதையே. கிட்டத்தட்ட பதிவேற்றப்பட்ட அனைத்துப் புகைப்படங்களையும் 48 மணிநேரங்களுக்குள் அழித்துவிடுவோம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவில் எழுந்த ஒரு முக்கியமான குற்றச்சாட்டு இதில் பதிவேற்றப்படும் புகைப்படங்கள் ரஷ்ய டேட்டா சென்டர்களில் சேமிக்கப்படுகின்றன என்பதுதான். ஃபேஸ்ஆப்பின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி குழு ரஷ்யாவில் செயல்பட்டாலும் இதற்கும் மறுப்பு தெரிவித்துள்ளது ஃபேஸ்ஆப். லாக் இன் செய்யாமலேயே எங்கள் சேவையை ஒருவரால் பயன்படுத்தமுடியும். 99% சதவிகித மக்கள் அப்படியே எங்கள் சேவையைப் பயன்படுத்துகின்றனர். எனவே புகைப்படம் ஒன்றை பதிவேற்றும் நபரை பற்றிய தகவல்களே தங்களிடம் இருக்காது என்ற வாதத்தையும் அதன் தரப்பில் வைக்கிறது ஃபேஸ்ஆப்.

-இளங்கோ கிருஷ்ணன்

Tags : FaceApp,Privacy
× RELATED சென்னையில் உள்ள தனியார்...