×

மேட்டூர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 33,000 கன அடியாக தொடர்ந்து அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 33,000 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்துள்ளது. கார்நாடக மாவட்டம் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநில பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனையடுத்து பாதுகாப்பு கருதி அந்த அணைகளில் இருந்து உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி வரை அதிகரித்தது. கடந்த சில நாட்களாக காவிரியில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளது.

இதனால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரும் வெகுவாக குறைக்கப்பட்டது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 35,000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் அருவியில் குளிக்கவும்  ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை விநாடிக்கு 33,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10,000 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 500 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் திறப்பை காட்டிலும் வரத்து அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.85 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 85.49 டி.எம்.சி ஆக உயர்ந்துள்ளது.


Tags : Mettur Dam, Waterfall, Continued, Increase
× RELATED பாரதியார் நினைவு தினம் மகாகவி நாள்:...