காஞ்சிபுரம்: மத உணர்வை தூண்டும் விதமாக பேசியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயருக்கு சம்மன் அளிக்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அத்திவரதர் தரிசன வைபவம் சமீபத்தில் நடந்து முடிந்தது. அத்திவரதரை மீண்டும் தண்ணீரில் வைக்கக் கூடாது என்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் கூறியிருந்தார். கடந்த காலங்களில் திருட்டு பயம் காரணமாக காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை நீருக்கடியில் வைத்தனர். தற்போது அது தேவையில்லை. பல்வேறு மடாதிபதிகள் அத்தி வரதரை மீண்டும் தண்ணீருக்கு அடியில் வைக்கக் கூடாது என என்னிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக முதல்வரை சந்தித்து அனைத்து மடாதிபதிகளும் கோரிக்கை விடுக்க உள்ளோம். நான் அதற்கான முயற்சியை செய்து வருகிறேன். அத்தி வரதர் வெளியில் இருந்தால்தான் நன்கு மழை பெய்யும். திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கிருஷ்ணபிரேமி என்ற உபன்யாசகரின் கனவில் தோன்றிய அத்தி வரதர், ‘தன்னை மீண்டும் தண்ணீருக்கடியில் வைக்கக் கூடாது’ என தெரிவித்ததாக, அவர் என்னிடம் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், சடகோப ராமானுஜர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது மத உணர்வை பாதிக்கும் விதமாக பேசியதாக காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சையது அலி என்பவர் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்திற்கு புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல்நிலையத்தில் வரும் 22ம் தேதிக்குள், நேரில் ஆஜராகுமாறு ஜீயர் சடகோப ராமானுஜத்துக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.