ராப்பூசல் வெள்ளாங்குளம் பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்கள், அபாயநிலையில் மின்மாற்றி: நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் வெள்ளாங்குளம் பகுதியில் உள்ள மின்மாற்றி அமைந்துள்ள மின்கம்மபங்கள் முழுவதும் சேதமடைந்து எந்த நேரத்திலும் கிழே விழும் அபாயத்தில் உள்ளது. இதனை மின்வாரியத்தினர் விரைந்து சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ளது ராப்பூசல் கிராமம். இந்த கிராமத்திற்கு இலுப்பூர் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் வெள்ளாங்குளம் பகுதியில் ஒரு மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து 1200க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதுஇதேபோல் 100க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகள் மற்றும் போர்வெல்களுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ள இரண்டு மின்கம்பங்கள் போதிய பராமரிப்புஇன்றி படிப்படியாக சேதமடைந்து விட்டது.

தற்போது அந்த மின்கம்பங்களில் சிமென்ட் பூச்சுகள் அனைத்தும் பெயர்ந்து கம்பிகள் மட்டுமே தெரிகிறது. வெளியில் தெரியும் கம்பியை தொட்டால் மின்சாரம் பாய்ந்து விடுமோ என்ற அச்சத்தில் மின்கம்பத்தின் அருகில் செல்வதை மக்கள் தவிர்த்து வருகின்றனர். லேசான காற்று அடித்தால்கூட மின்மாற்றி அமைந்துள்ள மின்கம்பங்கள் முறிந்து சாய்ந்து மின்மாற்றியும் கீழே விழுந்து பெரிய அளவில் ஆபத்துகளை ஏற்படுத்தும். இதுகுறித்து சம்மந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மின்வாரியம் தகுந்த நவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி மின்மாற்றியை பாதுகாப்பாக அமைக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: