பாவாலி ரோட்டில் ‘மெகா’ பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி

விருதுநகர்: விருதுநகர் நகராட்சியில் உள்ள பாவாலி ரோட்டில் ஏற்பட்டுள்ள மெகா பள்ளத்தால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் செல்கின்றனர். இந்த பள்ளத்தை சீரமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பாவாலி ரோடு வழியாக நகரின் ஒட்டுமொத்த பஸ் போக்குவரத்தும் நடந்து வருகிறது. பழைய பஸ்நிலையத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான டவுன் பஸ்கள், மதுரையில் இருந்து சிவகாசி செல்லும் பஸ்கள், கனரக வாகனங்கள், ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் உள்ள பொதுமக்கள் பாவாலி சாலை வழியா சென்று வருகின்றனர்.

இந்நிலையில், நகராட்சி முஸ்லீம் நடுநிலைப்பள்ளி முதல் மாவட்ட நூலகம் வரையிலான 200 மீ தூரம் சாலை குண்டும், குழியாக உள்ளது. இந்த சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 300 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அதை தொடர்ந்து உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நகரில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் மின்கட்டணம் கட்டுவதற்கு சென்று வருகின்றனர். எனவே, போக்குவரத்து அதிகம் உள்ள பாவாலி ரோட்டில் மோசமான நிலையில் உள்ள 200மீ தூரத்தை நகராட்சி நிர்வாகம் உடனே சீரமைக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மாணவ, மாணவியரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: