×

நெல்லையில் பரபரப்பு பாலத்திலிருந்து ஆற்றில் குதித்த முதியவர் மீட்பு

நெல்லை: நெல்லை தாமிரபரணி  ஆற்றுப்பாலத்தில்  நடந்து சென்ற முதியவர்  ஆற்றில் குதித்தார்.  லேசான காயத்துடன் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  நெல்லை டவுன் அனவரத விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பால சுப்பிரமணியன் (64). வயது முதிர்வின் காரணமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வருகிறார். நேற்று காலை பாலசுப்பிரமணியன், நெல்லை கொக்கிரகுளம்  ஆற்றுப்பாலத்தில் தள்ளாடியபடி நடந்து சென்றார். பின்னர் திடீரென ஆற்றுப்பாலத்தில் இருந்து கீழே ஆற்றில் குதித்தார். இதனை அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் மற்றும் ஆற்றில் குளித்து கொண்டிருந்த பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதைதொடர்ந்து அங்கிருந்தவர்கள் உடனடியாக சந்திப்பு  போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். முதியவர் ஆற்றில் விழுந்ததை கண்டவர்கள் அவரது கதி என்ன ஆச்சோ என்ற அச்சத்தில் ஆற்றுப்பாலத்தில் திரண்டனர். இதனிடையே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிலர், தண்ணீரில் தத்தளித்த முதியவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்ததால் அவருக்கு உடலில் லேசான காயம் காணப்பட்டது. சந்திப்பு போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். முதியவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Rescue ,elderly person, jumped , river
× RELATED விசாரணைக்காக வீட்டிற்கு சென்றபோது...