கோவை: தமிழக அரசு ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி, அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்படுகிறது. இது இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக ஆவின் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் டீ, பால் விலையும் இன்று முதல் உயர்த்தப்படுகிறது. கோவை மாவட்டத்தில் ரோடுஒரங்களில் பல இடத்தில் 100க்கும் மேற்பட்ட ஆவின் கடைகளில் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், பால் விலை உயர்வு காரணமாக ஆவின் கடைகளில் விற்பனை செய்யப்படும் டீ விலையை உயர்த்த உரிமையாளர்கள் சார்பில் முடிவு செய்துள்ளனர். அதன்படி, இன்று முதல் ஆவின் கடைகளில் ரூ.5க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த டீ, பால் ஆகியவை ரூ.6க்கு விற்பனை செய்யப்படும் எனவும், ரூ.5க்கு விற்பனை செய்யப்பட்ட காபி ரூ.10க்கு விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இது தவிர, மாவட்டத்தில் உள்ள அனைத்து டீ கடைகளிலும் டீ, பால், காபி விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளனர். இது குறித்து ஆவின்பாலக உரிமையாளர் தினேஷ்குமார் கூறியதாவது: பால் விலை உயர்வின் காரணமாக வேறு வழியின்றி நாங்கள் டீ, பால், காபி ஆகியவற்றின் விலையை உயர்த்தி உள்ளோம். ஆரம்பத்தில் ரூ.8 உயர்த்த முடிவு செய்தோம். ஆனால், திடீரென ரூ.3 உயர்த்தினால் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு, தற்போது டீ, பால் ஆகியவற்றிக்கு ஒரு ரூபாய், காபிக்கு ரூ.5 உயர்த்தியுள்ளோம். இது நாளை(இன்று) முதல் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து கோவை மாவட்ட பேக்கரி உரிமையாளர் நலச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி கூறுகையில், “டீ விலையை உயர்த்தி பத்து வருடங்களாகி விட்டது. ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து டீ விலையை உயர்த்துவது குறித்து அசோசியஷன் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த கூட்டத்தில் விலையை உயர்த்துவது குறித்து கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். ஆனால், டீ, காபி விலை உயர்த்த வாய்ப்பு இருக்கிறது” என்றார்.