×

பிரசவ காலத்தில் தாய் மரணத்தை தடுத்தாலும் குழந்தை மரணத்தை தடுப்பதில் தேனியில் தொடரும் சிக்கல்: பிரச்னைக்குத் தீர்வு தான் என்ன?

தேனி: தேனி மாவட்ட பொதுசுகாதாரத்துறை பிரசவ காலத்தில் தாய் மரணத்தை தடுப்பதில் பெருமளவு முன்னேற்றத்தை எட்டினாலும், குழந்தை மரணத்தை தடுப்பதில் சற்று பின்தங்கியே உள்ளது. தேனி மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஐந்து அரசு மருத்துவமனைகள், 43 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றில் அனைத்திலும் பிரசவம் பார்க்கும் வசதிகள் உள்ளன. எனவே, வீடுகளில் நடைபெறும் பிரசவங்கள் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. பிரசவ காலத்தில் தாய் மரணமடையும் சதவீதம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 16 ஆயிரம் பிரசவங்கள் நடந்துள்ளன.

இதில் 6 தாய்மார்கள் மட்டுமே இறந்துள்ளனர். எனவே, பிரசவகால மரணத்தை கட்டுப்படுத்துவதில் பெருமளவு முன்னேற்றம் கிடைத்துள்ளது. ஆனால் பிரசவத்தின் போது சிசு மரணம் 17 ஆக உள்ளது. இவ்வளவு நவீன வசதிகள் இருந்தும் சிசு மரணத்தை இந்த அளவு குறைக்க முடியவில்லை. இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது: கர்ப்பிணிகளுக்கு பிரசர், சர்க்கரை நோய், ரத்தத்தில் உப்புச்சத்து அதிகரித்தல், ரத்தசோகை ஏற்படுதல், நீர்சத்து குறைதல் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். இதனை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்து விட்டால் பிரசவ கால தாய் மரணத்தை முழுமையாக கட்டுப்படுத்தி விட முடியும்.

பிரசவகாலத்தில் டாக்டர்கள் கொடுக்கும் மருந்து மாத்திரைகள், அவர்கள் அறிவுறுத்தும் சத்தான கீரைகள், காய்கறிகள் சாப்பிட்டால் குழந்தை வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். சிசு மரணம் இருக்காது. ஆனால், ஒரு சில கர்ப்பிணிகள் டாக்டர்கள் பரிந்துரையினை முழுமையாக ஏற்பதில்லை. தவிர கர்ப்பகாலத்தில் முறையாக சிகிச்சைக்கும் வருவதில்லை. அதிக பணிச்சுமை காரணமாக சுகாதார செவிலியர்கள் கர்ப்பிணிகளை வீடு தேடிச் சென்று கவனித்து மருந்துகள், சத்துணவுகள் பரிந்துரைப்பதிலும் சிரமம் உள்ளது.

இது போன்ற காரணங்களால் குழந்தைகள் இறக்கும் போதே மூச்சுத்திணறல், இருதய கோளாறு, மூளை செயல்பாடு கோளாறு, குறைந்த எடையில் பிறத்தல், குறைந்த மாதங்களில் பிரசவம் நடப்பது உட்பட பல்வேறு இயற்கை பிரச்னைகளுடன் பிறந்து இறந்து விடுகின்றன. கடந்த ஆண்டு இறந்த 17 குழந்தைகளும் இதே போன்ற பிரச்னைகளால் தான் உயிரிழந்துள்ளன. இந்த வகைகளில் ஏற்படும் சிசு மரணத்தை தடுக்க கர்ப்பிணிகள் தான் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு கூறினர்.

Tags : Childbirth, infant death, persistence in honey
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...