முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் 5 வருடமாக விலைவாசி அதிகரிக்கும் போது பால் விலையும் உயரத்தான் செய்யும்

ஓமலூர்: ‘‘கடந்த 5 வருடமாக விலைவாசி எவ்வளவு உயர்ந்திருக்கிறது. அதனால், பால் உற்பத்தியாளர்களுக்கும் உயர்த்திதானே கொடுக்க வேண்டும்’’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.சேலம் மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நான்கு நாள் சுற்றுப்பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை சேலம் காமலாபுரம் வந்தார். பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:   

பால் உற்பத்தியாளர்கள் என்னை சந்தித்து பேசிய பொழுது, கால்நடை வளர்ப்பின் பராமரிப்பு செலவு கூடுதலாக இருக்கிறது, பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி ஐந்தாண்டு காலம் ஆகிறது. இந்த இடைப்பட்ட ஐந்தாண்டு காலத்தில், கால்நடை தீவனங்களின் விலை ஏற்றம், பராமரிப்புச் செலவு உயர்ந்திருக்கின்ற காரணத்தால், அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று கேட்டார்கள். விற்பனை விலையையும், கொள்முதல் விலையையும் கணக்கிட்டு அரசு, பசும்பாலுக்கு 4 ரூபாயும், எருமை பாலுக்கு 6 ரூபாயும் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல விற்பனை விலையும் 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இப்பொழுது, பல பால் உற்பத்தியாளர் ஒன்றிய சங்கங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும், அரசு இதையெல்லாம் சமாளித்து சுமார் 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர் பயனடைய வேண்டும் என்பதற்காக, பாலின் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளது. டீசல் விலை உயர்வதன் காரணமாக, பாலை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்கின்ற போக்குவரத்து கட்டணம் உயர்ந்திருக்கிறது. இதையெல்லாம் கருத்திலே கொண்டுதான் அரசு இந்த விலை நிர்ணயம் செய்திருக்கிறது.  கர்நாடகத்தில் ₹29.72, ஆந்திரா ₹28.13, தெலுங்கானா ₹27.30, குஜராத் ₹30.37. எல்லோரையும் விட நாம்தான் அதிகமாக பால் உற்பத்தியாளர்களுடைய கோரிக்கையை ஏற்று ₹32 ஆக நிர்ணயித்திருக்கிறோம்.  கடந்த 5 வருடமாக விலைவாசி எவ்வளவு உயர்ந்திருக்கிறது, சம்பளமும் எல்லோருக்கும் உயர்ந்திருக்கிறது. அதனால், பால் உற்பத்தியாளர்களுக்கும் உயர்த்திதானே கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கான தீவனத்தை ரேஷன் கடைகளில் வழங்குவது நடைமுறையில் ஒத்துவராது. மழை பாதுகாப்பு தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் கூட்டப்பட்டு, கனமழை பெய்கின்ற இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று, அந்தந்த மாவட்ட கலெக்டருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது.

தற்போது பெய்யும் மழையை கணக்கிட்டுத்தான், மேட்டூரில் தண்ணீர் திறந்து கொண்டிருக்கின்றோம். தண்ணீர் சென்றவுடனே விவசாயிகள் அதை பயன்படுத்துவதில்லை. நாற்று நட்ட பிறகே தண்ணீரை பயன்படுத்துவார்கள். எனவே, ஐந்து அல்லது 6 நாட்கள் கழித்து, விவசாயிகளுக்கு கூடுதலாக எவ்வளவு தேவையோ, அந்த அளவிற்கு தண்ணீர் திறக்கப்படும். புதிய கல்வி கொள்கையில் வெளிப்படைத் தன்மையோடுதான் அரசு இருக்கின்றது. மொழிக் கொள்கையை பொறுத்தவரை, இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும். பெரிய மாவட்டங்களெல்லாம் இரண்டாகப் பிரிக்க வேண்டுமென்று துமக்களிடத்திலிருந்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற பிரதிநிதிகளிடத்திலிருந்தும் கோரிக்கைகள் வந்தது. அதன் அடிப்படையில், பெரிய மாவட்டங்களெல்லாம் முதலிலே பிரிக்கப்படுகின்றன. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.கடந்த 5 வருடமாக விலைவாசி எவ்வளவு உயர்ந்திருக்கிறது, சம்பளமும் எல்லோருக்கும் உயர்ந்திருக்கிறது. அதனால், பால் உற்பத்தியாளர்களுக்கும் உயர்த்திதானே கொடுக்க வேண்டும்

Related Stories: