×

பிளக்ஸ் வைத்த போது மின்சாரம் பாய்ந்து 2 வாலிபர்கள் பலி

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் ஒரு திருமண மண்டபத்தில் இதே பகுதியை சேர்ந்த அதிமுக வட்ட செயலாளர் புருஷோத்தமன் மகன் திருமணம் நேற்று நடந்தது. மண்டபத்தில் அதற்கான முன் ஏற்பாடுகள் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் மணமகளின் பெரியப்பா மகனின் நண்பர்களான திருவாரூரை சேர்ந்த ஹரிஹரன் (27), கும்பகோணம் மதகடியை சேர்ந்த முகமது (27), சிவா(26), விஜய் (29) ஆகியோர் வந்து இருந்தனர்.நேற்று நள்ளிரவு 4 பேரும் திருமண வாழ்த்து பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 12 அடி உயரம், 16 அடி அகலம் கொண்ட பிளக்ஸ் பேனரை கட்ட வந்த அவர்கள், மண்டபம் முன் இருந்த டிரான்ஸ்பார்மரில் பிளக்ஸ் பேனரை சாய்த்து வைத்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஹரிஹரன், முகமது ஆகியோர் சம்பவ இடத்திலே பலியாயினர். சிவா, விஜய் ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த சுவாமிமலை போலீசார் அங்கு சென்று பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்த 2 பேரையும் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சோகத்துக்கு மத்தியில் அதிமுக பிரமுகரின் இல்ல திருமணம் நேற்று நடந்து முடிந்தது.



Tags : Electricity flows ,plugs ,placed 2 young men ,killed
× RELATED மீண்டும் அறிமுகமான முதல்...