செல்பி எடுத்தவரை தூக்கி வீசிய யானை

சத்தியமங்கலம்: சாலையோரம் நின்றிருந்த யானைஅருகில் சென்று செல்பி எடுக்க  முயன்ற நபரை யானை தாக்கியதால் படுகாயமடைந்தார்.ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் (36). இவர் நேற்று மாலை ஈரோட்டிலிருந்து தாளவாடி செல்வதற்காக காரில் தனது நண்பர்கள் 3 பேருடன் சத்தியமங்கலம் - மைசூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். ஆசனூர் அடுத்துள்ள வன சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் யானைகள் நின்று கொண்டிருந்தன. யானைகளை கண்ட ஞானசேகரன் காரை நிறுத்திவிட்டு அருகே சென்று செல்போனில் புகைப்படம் மற்றும் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த ஒரு யானை  துரத்தியதில் ஞானசேகரன் தவறி விழுந்தார். யானை ஞானசேகரனை தும்பிக்கையால் தூக்கி வீசியதில் படுகாயமடைந்தார். இதை கண்ட அவரது நண்பர்கள் யானையை சத்தம்போட்டு விரட்டிவிட்டு உடனடியாக ஞானசேகரனை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

Related Stories: