நெடுஞ்சாலை துறையில் கட்டுமான பணி தரமாக நடக்காததற்கு யார் காரணம்?: பொறியாளர் சங்கம் ‘பகீர்’ குற்றச்சாட்டு

சென்னை: நெடுஞ்சாலைத்துறையில் நடக்கும் கட்டுமான பணி தரமாக நடக்காததற்கு காரணம் யார் என்பது தொடர்பாக பொறியாளர் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம், தலைவர் தீபக் உட்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

* தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தில் உள்ள நிர்வாக இயக்குனர் பதவியிலும், தமிழ்நாடு சாலை வளர்ச்சி குழுமத்தில் உள்ள அனைத்து பொறியாளர் பணியிடங்களிலும் ஓய்வு பெற்ற பொறியாளர்களுக்கு பதிலாக, மற்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது போன்று நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றும் பொறியாளர்களை அயல்பணி அடிப்படையில் பணியமர்த்த வேண்டும்.

* கட்டுமானத் தொழிலாளர்கள் கட்டுமான பணிகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் தான் பணிகளை நேர்த்தியாக நிறைவேற்ற முடியும். பெரும்பாலான பணித் தளங்களில் பணியாளர்கள்/தொழிலாளர்களின் தேர்ச்சியை பொறியாளர்கள் உறுதி செய்ய முடியவில்லை. எதிர்காலத்தில் கட்டுமான குறைபாடுகள் இல்லாத கட்டுமானங்களை உருவாக்கிட கட்டுமான பணியாளர்களுக்கு தனியாக பயிற்சி நிலையம் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சங்கம் வேண்டி நீண்ட நாட்கள் ஆன போதிலும் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலையம் ஆகியோர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வருந்தத்தக்கது. ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது போன்று கட்டுமான தொழிலாளர்கள் பயிற்சி நிலையம் ஒன்று அமைத்திட தமிழக அரசிடம்  ஆணை பெற நடவடிக்கைககள் மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: