சென்னை: டாஸ்மாக்கில் காலியாக உள்ள 500 இளநிலை உதவியாளர் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று 9 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை 8 ஆயிரத்து 401 பேர் எழுதினர். தமிழகத்தில் 5 ஆயிரத்து 152 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் 26 ஆயிரத்து 56 ஊழியர்கள் பல்வேறு பணிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி 500 பேருக்கு டாஸ்மாக் நிர்வாகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்க திட்டமிடப்பட்டது. அதன்படி, இதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிர்வாகம் வெளியிட்டது. அதன்படி, இத்தேர்வை எழுத 8 ஆயிரத்து 726 பேர் விண்ணப்பித்தனர். இந்தநிலையில், இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்வுக்கு தடை விதித்தது. பின்னர், நடந்த விசாரணையில் தேர்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.