புதுடெல்லி: டெல்லியில் மனநலம் பாதித்த 12 வயது சிறுமி காணாமல் போய் 4 மாதத்திற்குப் பிறகு, அவளது தந்தையுடன் சேர்த்து வைக்க போலீசாருக்கு கூகுள் மேப் உதவி உள்ளது.டெல்லி கீர்த்தி நகரில் கடந்த மார்ச் 21ம் தேதி ஹோலிப் பண்டிகை அன்று 12 வயது சிறுமி இ-ரிக்ஷா ஒன்றில் ஏறி உள்ளார். ரிக்ஷா ஓட்டுநர் எங்கு செல்ல வேண்டுமென கேட்டதற்கு, அந்த சிறுமி பதிலளிக்கவில்லை. இதனால், சிறுமியை கீர்த்தி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அங்கு விசாரித்ததில், சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிந்தது. அவரது சொந்த ஊர் குர்ஜா கிராமம் என்றும், தந்தையின் பெயர் ஜித்தன் என்றும் கூறியிருக்கிறார். குர்ஜா கிராமம் எங்கிருக்கிறது என சிறுமிக்கு சொல்லத் தெரியவில்லை. இதனால் டெல்லியில் குர்ஜா உச்சரிப்பை கொண்ட சில பகுதிகளுக்கு சிறுமியை போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு யாராலும் சிறுமியை அடையாளம் காண முடியவில்லை. உத்தரப்பிரதேசத்தின் புலந்த்சாகர் மாவட்டத்தில் குர்ஜா கிராமம் இருப்பது தெரியவந்து, அங்கு சிறுமியை அழைத்துச் சென்று விசாரித்தனர்.