கொப்பாள்: கொப்பள் நகரில் ெகாடி கம்பத்தை அகற்றும் போது மின்சார கம்பி மீது உரசியதில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விடுதி வார்டனை போலீசார் கைது செய்துள்ளனர். வட கர்நாடகா கொப்பள் மாவட்டத்தில் பி.சி.எம். அரசு விடுதி இயங்கிவருகிறது. இந்த விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். விடுதியின் எதிரே சுதந்திர தின விழாவுக்கு தேசிய கொடி ஏற்ற இரும்பு கம்பம் பொருத்தப்பட்டிருந்தது. நேற்று விடுமுறை என்பதால், விடுதியில் இருந்த 5 மாணவர்கள் கொடிக்கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கொடி கம்பத்தை அகற்றிய பின், அதை விடுதியின் மேல் பகுதிக்கு கொண்டு சென்றனர். அப்போது மேலே சென்றுகொண்டிருந்த மின் கம்பி மீது கொடிக்கம்பம் உரசியது. இதனால், மின்சாரம் பாய்ந்து சந்தோஷ்(19), மகேஷ்(20), யந்திரேஷ் நாயக்(21), ஹரிபிரசாத் மோர்ச்(21), யோகேஷ் பாட்டீல்(20) ஆகிய 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.