சிவகங்கை அருகே யானை சின்னத்துடன் சூலக்கல் கண்டுபிடிப்பு

*கிபி 11ம் நூற்றாண்டை சேர்ந்தவை

சிவகங்கை : சிவகங்கை அருகே சாத்தரசன்கோட்டை பாப்பாகுடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான யானைச்சின்னம் உள்ள சூலக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, தொல்லியல் ஆய்வாளர் காளிராசா ஆகியோர் சிவகங்கை அருகே பாப்பாகுடியில் ஆய்வு செய்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மன்னர்கள் காலத்தில் கோயில்களின் தினசரி வழிபாட்டுக்காக, விளைநிலங்கள் மீது விதிக்கப்படும் வரியை நீக்கி அவற்றை கோயில்களுக்கு தானமாக வழங்குவார்கள்.

 இந்நிலங்களின் விளைச்சல் மூலம் கோயில் வழிபாடு தொடர்ந்து நடைபெறும். அவ்வகையில் சிவன் கோயிலுக்கு தானமாக வழங்கும் நிலம் ‘தேவதானம்’ என்றும், திருமால் கோயில்களுக்கு வழங்குவது ‘திருவிடையாட்டம்’ என்றும், சமண, பவுத்த பள்ளிகளுக்கு வழங்குவது ‘பள்ளிச்சந்தம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு சிவன் கோயிலுக்கு தானமாக வழங்கும் நிலங்களின் நான்கு எல்லைகளிலும் திரிசூலம் பொறிக்கப்பட்ட சூலக்கற்கள் நடப்பட்டு அவை பாதுகாக்கப்படும்.

இதுவே திருமால் கோயில் எனில் சங்கு சக்கரமும், சமணப்பள்ளி எனில் முக்குடையும், பவுத்த பள்ளி எனில் தர்மசக்கரமும் எல்லைக்கற்களில் பொறிக்கப்பட்டிருக்கும். பாப்பாகுடி சமயன் கோயிலில் ஒரு சூலக்கல்லும், சக்கரம் பொறிக்கப்பட்ட ஒரு திருவாழிக்கல்லும் மக்கள் வழிபாட்டில் உள்ளன. சமயன் கோயிலில் உள்ள சூலக்கல் 3 அடி உயரம், ஒரு அடி அகலம் உள்ள கருங்கல்லால் ஆனது. இதன் நான்கு பக்கங்களிலும் புடைப்பு சிற்பமாக திரிசூலம் பொறிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பக்கத்தில் திரிசூலத்தை தன் முதுகில் தாங்கி செல்லும் யானையின் சிற்பம் உள்ளது. அதன் மறுபக்கத்தில் சூலத்தின் மேல்பகுதியில் சந்திரனை குறிக்கும் பிறை வடிவம் உள்ளது. இக்கல்லில் யானை சின்னம் இருப்பதன் மூலம் அத்திகோசத்தார் எனும் யானைப்படை வீரர்கள் வழங்கிய தேவதான நிலத்தில் நட்டு வைக்கப்பட்டதாக இதை கருதலாம். வணிகர்கள் தங்களின் பாதுகாப்புக்காக வைத்திருந்த யானைப்படையினர் அத்திகோசத்தார் எனப்பட்டனர். பெருவழிகளில் வணிகர்களை பாதுகாப்பதற்காக இவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

 மன்னர்கள் கோயில்களுக்கு கொடையளிக்கும்போது உடனிருந்து, அக்கொடையை பாதுகாக்கும் பணிகளையும் இவர்கள் செய்துள்ளனர். இவர்களை பற்றி முதன்முதலில் பூலாங்குறிச்சி கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சோழர்கால கலைப்பாணியில் உள்ளதால் இது கி.பி.11ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம். இவ்வாறு கூறினர்.

Related Stories: