சென்னை: திருமண செலவுக்கு பணம் கிடைக்காத விரக்தியில் மருத்துவக் கல்லூரி மாணவி கடலில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மன்னார்குடி, பகுதியை சேர்ந்தவர் கலா (25) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்.டி) பட்ட மேற்படிப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் அவருக்கு அடுத்த மாதம் 12ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் திருமண செலவுக்கு பணம் தேவைப்படும் என்பதால் தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் பணம் கிடைக்காத விரக்தியில் இருந்த கலா நேற்று முன்தினம் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து அவர் திடீரென தற்கொலை செய்யும் நோக்கில் கடலுக்குள் இறங்கினார். அப்போது அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் ஓடிச் சென்று தற்கொலைக்கு முயன்ற கலாவை காப்பாற்றி உள்ளார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து மெரினா கடற்கரை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு திருமண செலவுக்கு பணம் கிடைக்காத விரக்தியில் தான் தற்கொலை முயற்சி செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.