தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிந்து 3 மாதங்கள் ஆகியும் அரசு ஊர்தி ஓட்டுனர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவில்லை

சென்னை: தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிந்து 3 மாதங்கள் ஆகியும் தேர்தலில் பணியாற்றிய அரசு துறை ஊர்தி ஓட்டுனர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவில்லை என்று தேர்தல் ஆணையம் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர்கள் தலைமை சங்க மாநில தலைவர் பாலமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:நடந்து முடிந்த 2019 மக்களவை தேர்தலில் அரசு துறை ஊர்தி ஓட்டுனர்கள் இரவு பகலாக தேர்தல் பணி ஆற்றியுள்ளார்கள். அவர்களுக்கு தேர்தல் நடந்து முடிந்து 3 மாதங்கள் ஆகியும் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலில் பணியாற்றிய அரசு துறை ஊர்தி ஓட்டுனர்களுக்கு தேர்தல் ஊக்கத்தொகை வழங்கவில்லை.தேர்தலுக்கு முன்னரே ஆணை வெளியிட்டும், நிதி ஒதுக்கியும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்னும் தேர்தல் பணியாற்றிய அரசு துறை ஊர்தி ஓட்டுனர்களுக்கு தேர்தல் ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை.

கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும், நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் ஒரே மாதிரியான ஊக்கத்தொகையை வழங்கியுள்ளார்கள். ஊர்தி ஓட்டுனர்கள் ஊதியத்தில் 50 சதவீதம் தேர்தல் பணியாற்றிய ஓட்டுனர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டுமென்று பலமுறை தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது இரவு பகலாக பணியாற்றிய அரசு துறை ஊர்தி ஓட்டுனர்களிடையே மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: