சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான பூண்டி நீர் வரத்து இல்லாமல் வறண்ட நிலையிலேயே உள்ளது. இதற்கு நீர்வரத்து கால்வாய்களை முறையாக பராமரிக்காததே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி, தற்போது முற்றிலும் வறண்ட நிலையில் காணப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த பலத்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பூண்டி ஏரி நிரம்பியது. நவம்பர் 16ம் தேதி பூண்டி ஏரியின் மொத்த நீர்மட்டமான 35 அடியில் 34 அடி வரை நிரம்பியதால் உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. அந்த நீரை தேக்கி வைக்க வசதியில்லாததால் வீணாகக் கடலில் கலந்தது.தொடர்ந்து, 2016, 2017, 2018ம் ஆண்டுகளில் அனைவரும் பருவ மழையை எதிர்பார்த்து தயாராக இருந்த நிலையிலும், மாவட்ட நிர்வாகம் பல கோடி செலவில் முன்னேற்பாடுகளை செய்த நிலையிலும் பருவ மழை பொய்த்துப் போனது. ஏரி, குளங்கள் நீரின்றி வறண்டன. இதனால், திருவள்ளூர் பகுதியிலும் நிலத்தடிநீர் முற்றிலும் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடியது.